தமிழ்மணம் அறிவிப்புகள்

Tuesday, April 05, 2005

க்ரியேட்டிவ் காமன்ஸ் உரிமம்

ஒரு நூலோ, கதையோ, கவிதையோ, கட்டுரையோ, ஒருவரால் எழுதப்பட்டவுடன் அதன் முழு பதிப்புரிமை (copyright) அதை எழுதியவருக்கு சொந்தமாகிறது. ஒருவர் © என்று குறியீட்டுடன் அறிவித்தாலும் அறிவிக்காவிட்டாலுமே இதுதான் நிலை. அவராக அந்த உரிமையை இன்னொருவருக்கோ நிறுவனத்துக்கோ அளித்தால் அந்த ஆக்கத்தின் மீதான பதிப்புரிமை அப்படி அளிக்கப்பட்டவருக்கு வந்து சேருகிறது. இப்படி, 'பதிப்புரிமை ஒரு தனியாருக்கு சொந்தமாக இருப்பது' ஒரு எல்லை எனக்கொண்டால், 'முழுதும் பொதுவுடைமையாக்கப்படுதல்' இன்னொரு எல்லை. இந்த இரு எல்லைகளின் சாதக பாதகங்களை ஆராய்ந்தால்:

தனியாருக்கு முழு உரிமை:

நன்மைகள்:
  1. உரிமையுள்ளோர்க்கான அங்கீகாரம் என்றுமே மறுக்கப்படாது.
  2. ஆக்கத்தை இடைச்செருகல்கள் மூலம் சிதைக்க இயலாது.
  3. உரிமையுள்ளோரைத் தவிர்த்து யாரும் விற்பனை மூலம் இலாபம் அடைய முடியாது.

தீமைகள்:
  1. உரிமையுள்ளோர் தவிர யாரும் மறுவினியோகம் செய்யக் கூடாதாகையால் பரவலாக வாசிக்கப்படுவது தடைப்படுகிறது.
  2. சில (நுண்கலைப் படைப்புகள் போன்ற) ஆக்கங்கள் இன்னொருவரால் மேம்படுத்தப்படவும் வாய்ப்பிருக்கிறது. இந்த முழு உரிமைப் பிரச்னையால் அந்த வாய்ப்பும் தவறிப்போகிறது.
பொதுவுடைமை:

நன்மைகள்:
  1. உரிமைப் பிரச்னைகளால் தடைப்படாததால் இயன்ற அளவில் பரவலாக ஒரு ஆக்கம் வாசிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.
  2. சில (நுண்கலைப் படைப்புகள் போன்ற) ஆக்கங்கள் இன்னொருவரால் மேம்படுத்தப்படவும் ஏதுவாகிறது.

தீமைகள்:

  1. ஆக்கியோருக்கு/உரிமையுள்ளோருக்கான அங்கீகாரம் (மேற்கோள் போன்றவை மூலம்) எப்போதும் கிடைக்கும் என்று உறுதி செய்ய இயலாது.
  2. யார் வேண்டுமானலும் ஆக்கத்தை மாற்றி, சிதைக்க வாய்ப்பிருக்கிறது.
  3. உரிமையுள்ளவரைத் தவிரவும் வேறு பலரும் இலாப நோக்கில் வினியோகித்துப் பயன்பெற வாய்ப்பிருக்கிறது.

வலைப்பதிவுகள் போன்ற ஊடகம் வழியாக நான் எழுதுவதன் முழுப்பயனும் கிட்டவேண்டும் என்றால் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு பதிப்புரிமை தேவைப்படுகிறது.

அந்த உரிமையில் நான் எதிர்பார்ப்பது:

  1. நான் எழுதுவதை யாரும் நகலெடுக்கவும், மறுபதிப்பு, மறுவினியோகம் செய்யவும் அனுமதி அளிக்க விருப்பம். இதனால் மேலும் பரவலாக என் எழுத்தை நான் கொண்டு செல்ல முடியும்.
  2. நான் எழுதுவதை மேலும் மேம்படுத்த வாய்ப்பிருக்கும் ஒருவரை நான் தடைசெய்ய விரும்பவில்லை. கலை/இலக்கியம்/அறிவியல்/சமூக கருத்துக்களாக நான் படைத்ததுவே என்றும் உச்சம் என்று சொல்லமுடியாது. காலத்துக்கேற்ப சூழலுக்கேற்ப அவற்றை மாற்றியமைக்கவும் மேம்படுத்தவும் நான் தடையாக இருக்க விரும்பவில்லை.

ஆனால் அதே சமயம் நான் இந்த விஷயத்தில் சில கொள்கைகளையும் வைத்திருக்கிறேன். அவை:

  1. எங்கு மறுபதிப்போ, மறுவினியோகமோ செய்யப்பட்டாலும் 'இதன் மூலவடிவம், இன்னார் ஆக்கியதிலிருந்து எடுக்கப்பட்டது' என்ற குறிப்போடு என் பெயர் மேற்கோளிடப்படவேண்டும். என் படைப்பு அனாமதேயமாக உருவிக்கொள்ளப்படக்கூடாது.
  2. நான் இலவசமாக அளிக்க முடிவு செய்தபின் இடையில் யாரும் இதை வைத்து லாபம் சம்பாதிக்கக் கூடாது. எனவே அப்படி மறுவிநியோகம் செய்பவர் நான் ஏற்படுத்தியுள்ள இதே கட்டளைகளின் அடிப்படையில், இலவசமாகவே செய்யவேண்டும்.

இது என் நிலை மட்டுமல்ல. தன் படைப்புகளைப் பொதுப் பயனுக்கு வைக்க எண்ணும் என்னைப்போல எண்ணற்றவர்களின் நிலை. அவர்களின் விருப்பத்தை சட்டபூர்வமான உரிமமாக வரைந்து அளிக்கிறது க்ரியேட்டிவ் காமன்ஸ் என்னும் அமைப்பு. நான் என் வலைப்பதிவுகளின் காப்புரிமையை இதன்படி மாற்றியமைத்திருக்கிறேன்.

என்னைப் போலவே எண்ணும் வலைப்பதிவர்களும் இதைச் செய்யலாம் என்று பரிந்துரைக்கிறேன். நாளை தமிழ்மணம் போன்ற திரட்டிகள் உங்கள் ஆக்கங்களை திரட்டவும், பரவலான வாசகர் வட்டத்துக்கு விநியோகிக்கவும் இந்த உரிமம் அனுமதியளிக்கிறது. பலர் கேட்டுக்கொண்டபடி தமிழ்மணம் தளத்திலிருந்து ஒருவாசகர் தான் தேர்ந்தெடுத்த ஆக்கங்களை பிடிஎஃப் மென்னிதழாக செய்துகொள்ளும் வசதி செய்யப்படும்போது, இந்த உரிமம் அளித்துள்ள வலைப்பதிவுகளை மட்டுமே அந்த தேர்வில் சேர்க்க முடியும்.

இப்படி மென்னிதழாக்கி எடுத்துக்கொள்ள கட்டணம் வசூலிக்கப்படாது என்பதாலும், தளத்தைப் பயன்படுத்த சந்தாக் கட்டணம் வசூலிக்கப்படாது என்பதாலும் தமிழ்மணம் அளிக்கவிருக்கும் இந்த சேவை 'இலாப நோக்கிலான விற்பனை'யாகக் கொள்ளப்படமுடியாது என்பதையும் சொல்லிக்கொள்கிறேன். அதில் மாற்றுக் கருத்திருப்பவர்கள் தங்கள் எண்ணங்களையும் சொல்லலாம்.

3 Comments:

  • //அவர்களின் விருப்பத்தை சட்டபூர்வமான உரிமமாக வரைந்து அளிக்கிறது க்ரியேட்டிவ் காமன்ஸ் என்னும் அமைப்பு. நான் என் வலைப்பதிவுகளின் காப்புரிமையை இதன்படி மாற்றியமைத்திருக்கிறேன். //

    நன்றி. மேலும் பலரும் பின் தொடர்வார்கள் என்று நம்புகிறேன்.

    அன்புடன்
    நவன் பகவதி

    By Anonymous Anonymous, At April 05, 2005 3:20 PM  

  • கொஞ்சம் புரிந்த மாதிரி இருக்கிறது. இருந்தாலும், கீழ்க்கண்ட பாய்ண்ட் தொடர்பாக, நீண்ட நாளாக ஒரு சந்தேகம் இருக்கிறது. பாமரத்தனமானது என்றால் எச்சூஸ்மீ ப்ளீஸ்

    //2.நான் இலவசமாக அளிக்க முடிவு செய்தபின் இடையில் யாரும் இதை வைத்து லாபம் சம்பாதிக்கக் கூடாது. எனவே அப்படி மறுவிநியோகம் செய்பவர் நான் ஏற்படுத்தியுள்ள இதே கட்டளைகளின் அடிப்படையில், இலவசமாகவே செய்யவேண்டும்//


    இலவசமாக அளித்த பின், அதை வைத்து ஒருவர் லாபம் சம்பாதிக்கின்றாரா இல்லையா என்பதை எப்படிக் கண்காணிக்க முடியும் ? பொதுவாக லாபம் என்பது துட்டுக் கணக்கில்தான் பார்க்கப் படுகின்றது. இணையத்தைப் பொறுத்தவரை, ஹிட் ரேட்டுதானே கரன்ஸி? உதாரணமாக, பொது உடமையாக இருக்கும் உங்கள் ஆக்கத்தை, நான் உங்கள் அனுமதியுடன், லாபம் சம்பாதிக்க மாட்டேன் என்று உறுதி அளித்து விட்டு, என்னுடைய வலைப்பதிவில் போடுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் காரணமாக என் வலைப்பதிவுக்கு வரும் டிரா·பிக்கை வைத்து காசு பண்ண முடியும், உங்களுக்குத் தெரியாமலே. ஒருக்கால், இது gentleman's agreement போல என்றால், நான் ஜூட் .

    By Blogger Jayaprakash Sampath, At April 05, 2005 4:07 PM  

  • //இணையத்தைப் பொறுத்தவரை, ஹிட் ரேட்டுதானே கரன்ஸி? //
    இது உண்மையானால் ஏன் ஆ.வி. இலவசத்திலிருந்து சந்தாவுக்கு மாறி ஹிட் ரேட்டைக் குறைத்துக்கொள்ளவேண்டும்?

    நான் புரிந்துகொண்டபடி ஆ.வியோ, அம்பலமோ, ஆறாம்திணையோ வாசிக்க சந்தா கேட்பதும், தமிழோவியம் இகாரஸின் புத்தக்கத்தை இறக்கிக்கொள்ள மலிவுவிலையாக ஒரு பணம் கேட்பதும் வணிகச் செயல்பாடுகள். (அது சரியா தப்பா என்ற பிரச்னைக்குள் வரவில்லை) அதில்லாமல் தளம் அமைக்க/நிர்வகிக்க/நடத்த ஆகும் செலவுகளுக்காக விளம்பரம் செய்வது வணிகச் செயல்பாடாக எப்படிச் சொல்லமுடியும்? எல்லாமே இலவசமாக கிடைக்குமா?

    எனக்கு இது ச்மபந்தமாக தெளிவுகிட்டுமா என்று *இலவச ஆலோசனை எதிர்பார்க்காமல்* $5 (மலிவுதான் என்ன செய்ய?) செலவு செய்யத்தயார் என்று சொல்லிப் பார்த்தேன். இதுதான் கிடைத்தது. பாருங்க. முடிஞ்சா அஞ்சு டாலர் சம்பாதியுங்க:-)

    By Blogger Kasi Arumugam, At April 05, 2005 4:30 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home