தமிழ்மணம் அறிவிப்புகள்

Saturday, April 14, 2007

தமிழ்மணத்தின் மீதான ஆதாரமற்ற அவதூறுகளை எதிர்கொள்ளல்

அண்மைக்காலமாக தமிழ்மணத்தின் மீதான ஆக்கபூர்வமான விமர்சனங்கள் குறைந்து ஆதாரமில்லாது பழி சுமத்துவது சில பதிவர்களின் இடுகைகளிலும் பின்னூட்டங்களிலும் அதிகரித்து வருகிறது. தமிழ்மணம், டிஎம்ஐ ஆகியவற்றின்மீது இக்குற்றச்சாட்டுகளை அள்ளிவீசும் இடுகைகளிலும் பின்னூட்டங்களிலும் ஒரு திட்டமிட்டு ஒருங்கமைக்கப்பட்ட தாக்குதலும் நோக்கும் இருப்பதை எம்மைப்போலவே பதிவர்களும் உணர்ந்திருப்பார்கள். தன்மீதான நேர்மையான, முறையான ஆதாரங்களுடனான விமர்சனங்களை, அவை எவையாயினும் தமிழ்மணம் என்றுமே வரவேற்கிறது. நியாயமான விமர்சனங்களை கருத்திலெடுத்துத் தொடர்ந்து குறைகளெனப்பட்டவற்றைக் களைந்து, தளத்தையும் சேவைகளையும் மேம்படுத்தி வருகிறது. ஆனால், ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைக் கண்டு இனி வாளாவிருப்பதில்லை என தமிழ்மணம் முடிவெடுத்திருக்கிறது. இதுவரை சுமத்தப்பட்ட பழிகளில் மிகப் பெரிய அவதூறாக பதிவர் நேசகுமார் "போலி பொன்ஸ், ஜெயராமன், ஆரோக்கியம், திலகவதி ஐபிஎஸ், தமிழ்மணம்...." என்ற தலைப்பில் எழுதியுள்ள இடுகையையும், அங்கே அவர் அனுமதித்துள்ள பின்னூட்டங்களையும் தமிழ்மணம் கருதுகிறது. அவ்விடுகையில் நேசகுமார் எழுதியுள்ள "தமிழ்மணத்தின் புதிய நிர்வாகிகள், அவரது ஐபி தகவல்களை வெளியிட்டு அவரை மாட்டிவிட்டுவிட்டார்கள் என்று எனக்கு ஒரு மடலும் வந்தது" என்கிற வரி அபத்தமானது மட்டுமல்ல, ஆதாரம் எதையுமே வெளிப்படையாக முன்வைக்காது பொய்யினைத் திட்டமிட்டுப் பரப்பும் செயலுமாகும்.

இக்குற்றச்சாட்டுக்கு, பதிவர் நேசகுமார் தன்னிடமுள்ள ஆதாரத்தை இருபத்துநான்கு மணிநேரத்துள்ளே வெளிப்படையாக, முழுமையாக, தன் பதிவிலே காட்ட வேண்டும். இல்லையேல், தன்னிடம் ஆதாரமில்லை என்று ஒப்புக்கொண்டு, தன்னுடைய குற்றச்சாட்டிற்கும், தன் பதிவில் அனுமதித்துள்ள பின்னூட்டங்களில் வீசப்பட்டுள்ள தமிழ்மணத்தின் மீதான எல்லையற்ற அவதூறுகளுக்கும் தார்மீகப் பொறுப்பேற்று, அவற்றை நீக்கிவிட்டு பகிரங்கமாக வருத்தமும் தெரிவிக்க வேண்டும். அடுத்த 24 மணி நேரத்திற்குள் இது செய்யப்படாவிட்டால் நேசகுமாரின் பதிவு தமிழ்மணம் திரட்டியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என்பதை இங்கே தெரிவிக்கின்றோம் (15 ஏப்ரல் 2007, 10:00 முற்பகல் அமெரிக்கக்கிழக்குக்கரைநேரம்). இதுபோன்ற, வேண்டிய ஆதாரங்களை முன்வைக்காது அவதூறுகளைத் தமிழ்மணம் மீது பதிவுமூலமும் பின்னூட்டங்கள் ஊடாகவும் பரப்பும் ஏனைய பதிவுகளும் எதிர்காலத்திலே நீக்கப்படுமென்பதைத் தெளிவாக அறியத்தருகின்றோம்.

இது போதாதென்று "தமிழ்மணம் கைமாறிவிட்ட நிலையில், இப்போது தமிழ்மணத்தை நிர்வகிப்பவர்கள் தயவுசெய்து இந்தப் பிரச்சினையில் அவர்களின் பங்கு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அதுவும் தமிழ்மண கருவிப்பட்டை இருக்கும்போது நமது ஒவ்வொரு செயலும் தமிழ்மணத்தால் பதிவு செய்யப்படும் வாய்ப்பிருக்கின்றது. இந்த தகவல்கள் யார் யாருடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன, who is privy to all these details, யாரெல்லாம் டெக்னிக்கல் விஷயங்களை பார்த்துக் கொள்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவது நல்லது" என்று ஆலோசனையும் வழங்கியுள்ளார். இதற்குப்பின்னால், தமிழ்மணம் ஐபி முகவரிகளைச் சில பதிவர்களுக்கு வழங்கி விட்டதாகவே அறிவித்துக்கொண்டு, தமிழ்மணம்மீது திட்டமிட்ட அவதூறுகளை விசிறியிருக்கும் பின்னூட்டங்களையும் எதுவிதமான தார்மீகமுரணும் கூச்சமுமின்றி அனுமதித்திருக்கின்றார்.

பதிவர்கள் தங்கள் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைக்க விழையும்போது, "Terms of Use" மற்றும் "Policy of Privacy" பக்கங்களைப் படித்து, விதிகளை ஏற்றுக்கொண்ட பின்னரே பதிவை சமர்ப்பிக்கிறார்கள் என்பது தமிழ்மணத்தில் இணைந்திருக்கும் அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்திருக்கும். "Policy of Privacy" பக்கத்தில் பதிவர்களின் அந்தரங்கத் தகவல் சேகரிப்பது பற்றியும், அவை முறையான விண்ணப்பமூடே சட்டம் கொணரக் கேட்டாலன்றி, எந்நிலையிலுங்கூட, எவருடனும் பகிர்ந்துகொள்ளப்படுவதில்லை என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

"Each time a visitor comes to thamizmanam.com site, we collect the visitor's domain name/IP Address, referral data and browser/platform type. thamizmanam.com also counts, tracks, and aggregates the visitor's activity into our analysis of general traffic flow. thamizmanam.com aggregates this information to determine trends, preferences, reading patterns, and demographics of the user community in general. Occasionally we may provide this aggregate data to the sponsors and business partners. Specific information such as name, IP address, email address, or other contact information will never be shared with anyone unless ordered by a court of law."

தமிழ்மணத்தினை நடத்தும் Tamil Media International, LLC என்ற நிறுவனம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பதிவு செய்யப்பட்டு, அந்நாட்டுச்சட்டங்களுக்கு உட்பட்டு நடத்தப்படும் நிறுவனம். அந்நாட்டின் சட்டங்கள் வழங்கும் பேச்சுரிமை, தனிநபர் தகவல் காப்பு விதிகள் முற்று முழுதாக பின்பற்றப்படுகின்றன என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கின்றோம்; தெளிவுபடுத்துகிறோம். இந்நிறுவனத்தினை நடத்துகின்றவர்களின் பெயர்கள் இத்தளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இதற்குமேல் ஒரு பதிவருக்குத் தமிழ்மணத்தின் உள்ளமைப்பு, நிர்வாகம் தொடர்பாக எவ்விதமான மேலதிகத்தகவலும் தேவையில்லை, அப்படியாகத் தரவேண்டிய அவசியமும் எமக்கில்லை என்று கருதுகிறோம். தமிழ்மணத்தின் திட்டங்கள் நிர்வாகக் குழுவுக்குள் நாட்டின் சட்டங்களுக்கும் நிறுவன விதிகளுக்கும் அமைய விவாதிக்கப்பட்டு , முடிவுகள் எடுக்கப்பட்டுச் செயற்படுத்தப்படுகின்றன. எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும். அதற்குமேல், எமது செயற்பாடுகள் பற்றி, முறையான வேண்டுகோளுடன் வரும் அமெரிக்கநீதித்துறையின் வினாக்களுக்கு அப்பால் எவருக்கும் நாம் விபரித்துக்கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை.

மேலும், கடந்த காலத்திலே எமது செயற்பாடுகளை அவதானித்தவர்களுக்கு நிறுவனம் என்ற நிலையிலே நாம் எத்துணை விதிமுறைகளின் அடிப்படையிலே ஒவ்வொரு செயற்பாட்டிலும் கவனம் எடுத்து இயங்குகின்றோம் என்பதைக் காணமுடிந்திருக்கும். பதிவர்களிடையேயான பிணக்குகளிலும் பிணைவுகளிலும் தமிழ்மணம் தலையிடுவதில்லையென்பதையும் அதன் காரணமாகவே தொடர்ந்து வெவ்வேறு சார்புகளுடனான பதிவர்கள் சிலராலே தொடர்ந்து தாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என்பதையுங்கூட நிதானத்துடனும் நேர்மையுடனும் அணுகும் பதிவர்கள் கண்டிருப்பீர்கள்.

தமிழ்மணம்_உதவி/தகவல் பகுதியிலே மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டு, மேற்கோள் காட்டப்பட்டுள்ள தமிழ்மணத்தின் இந்த உறுதிமொழியினைச் சேரும்போது வாசித்த பின்னும் நம்பிக்கையில்லாத பதிவர்கள், எவ்விதமான நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் தமிழ்மணத்திலே சேர்ந்திருந்தாலுங்கூட, இப்போதுங்கூட, தங்கள் பதிவுகளை நீக்கிக்கொள்ள விண்ணப்பித்தால் அப்பதிவுகளை நீக்குவதில் எமக்கு எந்தவித பிரச்சினையுமில்லை. அப்படி விண்ணப்பிக்காமல் நேசகுமாரின் இடுகையில் உள்ளது போன்று ஆதாரமற்ற அவதூறுகளைத் தாங்கி இடுகைகள் வந்தால் அவற்றை எழுதிய பதிவர்களின் நம்பிக்கையின்மையைக் கருத்தில் கொண்டும் தமிழ்மணத்தின் நலனைக் கருத்திலே கொண்டும் சிறு அறிவிப்புகளுடன் அப்பதிவுகளை நாங்களாகவே விரைந்து நீக்குவது குறித்தும் பரிசீலிப்போம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழ்மணத்தில் தொடர்பவர்கள் "Terms of Use" பக்கத்தில் உள்ள விதிகளுக்குக் கட்டுப்பட்டும், "Policy of Privacy" பக்கத்தில் அளித்திருக்கும் உறுதிமொழி மீது நம்பிக்கை வைத்தும் தொடர்கிறார்கள் என்று நம்புகிறோம். பதிவர்களுக்கும், தமிழ்மணத்திற்கும் இடையிலான நம்பிக்கையும், புரிதலும் ஆக்கபூர்வமான விமர்சனங்களுமே இத்திரட்டியைத் தொடர்ந்து இயக்கவும், மேம்படுத்தவும் எம்மை ஊக்குவிக்கும். தமிழ்மணத்தினை, டிஎம்ஐ நிறுவனத்தினை அமைத்து அதன்கீழே தன்னாவர்த்துடன் இலாபநோக்கு எதுவுமின்றி நடந்தும் அங்கத்தவர்களுக்கும் குடும்பம், தொழில், தமக்கென்றும் ஒரு பதிவினைப் பதியும் ஈடுபாடு என்பன உண்டு என்பதையோ, குறைந்தது இருக்கக்கூடும் என்பதையோ பதிவர்கள் தமிழ்மணத்தினைப் பயன்படுத்தும் ஏதாவதொரு கணத்திலேனும் எண்ணியிருக்கக்கூடும். எமது குடும்பம், தொழில் சார்ந்த அன்றாட வாழ்க்கை அழுத்தங்களுக்கிடையேயும் பரந்துபட்ட வலைப்பதிவுத்தமிழ்ச் சமூகத்தின் மீதுள்ள அக்கறையை முதன்மைக்குறிக்கோளாகக் கொண்டு அன்றாடம் எம் பொருள், நேரம், ஆற்றலைச் செலவிட்டு, இச்சேவையினை வழங்கி வருகிறோம் என்பதைப் பெரும்பாலான பதிவர்கள் புரிந்திருப்பார்கள் என உளப்பூர்வமாக நம்புகிறோம். இந்நிலையில் தொடர்ந்தும் இதுபோன்ற டிஎம்ஐ/ தமிழ்மணம் மீதான ஆதாரமற்ற அவதூறுகளை கருத்துச்சுதந்திரம் என்ற போர்வையின்கீழே தமது ஆதங்கங்களுக்கும் பயங்களுக்கும் வெறுப்புகளுக்கும் மறைந்துகொள்ளுதல்களுக்கும் வடிகாலாகவும் கேடயங்களாகவும் அள்ளிவீசுதலைத் தொடர்ந்தும் அனுமதித்தல், வரப்போகும் வலைப்பதிவுச்சந்ததியினருக்குத் தமிழ்மணம் பற்றி மிகவும் தவறான கருத்துகளைத் திணிக்கும் திட்டமிட்ட நடவடிக்கையாகவே காண்கிறோம். இதனைத் தொடர்ந்து அனுமதிப்பதன் மூலம், இத்தகைய தரம் தாழ்ந்த நடைமுறை இயல்பே என்ற தவறான கருத்தினைப் பரப்பவும் வேர்விழுத்தவும் நாம் விரும்பவில்லை.

தானியங்கு வலைத்திரட்டிகளைத் தொழில்நுட்பம் தெரிந்த எவரும், ஏன் வருங்காலத்திலே தெரியாதவர்கள்கூட ஆக்கிவிட்டுப்போகலாம். ஆனால், தான் சார்ந்த சமூகத்தின் நலனை முன்னிட்டு, அதனை மேம்படுத்தும் நோக்குடன் தொடங்கப்பட்ட ஒரு திரட்டி, இப்படியான தன் மீதான சமூகப்பிறழ்வுடனான தொடரும் திட்டமிட்ட ஆதாரமற்ற தாக்குதல்களைக் கருத்துச்சுதந்திரம் என்ற தவறான அர்த்தப்படுத்துதலுடன் 'ஆயிரம் பூக்கள் மலரட்டும்' என்பதாக அனுமதிப்பது, மிகவும் தவறான முன்மாதிரியாகவே இருக்கமுடியும். இத்தகைய காழ்ப்புணர்வுடனான அவதூறுகள் ஒருபோதும் தாம் சொல்லிக்கொள்ளும் கருத்துச்சுதந்திரத்திற்கான மதிப்பினைத் தருவதில்லை. ஒரு தன்னார்வ, தானியங்கித்திரட்டிக்குத் தன்னிலே எத்தனை பதிவுகள் திரட்டப்படுகின்றன என்பதிலும்விட, அதற்கான அடிப்படைநோக்கத்தினை நோக்கி தொடர்ந்தும் நடப்பதுடனான ஒரு சமூகத்தார்மீக கடப்பாடு இருக்கவேண்டுமென முழுமையாக நம்புகிறோம். தமிழ்மணம் வலைத்திரட்டியேயொழிய வலைத்திட்டியோ தாங்கியோ அல்ல.

அதனால், தொடர்ந்தும் இத்தகைய தன்மீதான திட்டமிடப்பட்ட ஆதாரமற்ற அவதூறுகளை எக்காரணம் கொண்டும் தமிழ்மணம் அனுமதிக்காது என்பதினை இப்பதிவு மூலம் உறுதிப்படுத்துகின்றோம்.

34 Comments:

  • Well done. Go on and thanks for your sincerity.

    Massila.

    By Blogger மாசிலா, At April 14, 2007 10:41 AM  

  • Well Said !!!

    By Blogger ரவி, At April 14, 2007 10:48 AM  

  • best kanna best

    By Blogger Pot"tea" kadai, At April 14, 2007 11:18 AM  

  • சரியான நடவடிக்கை.

    உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்யும் இவர்களை நீக்குவதினால், எந்த பாதகமும் வந்து விடாது தமிழ் மணத்திற்கு.

    மாறாக, பல வலைப்பதிவர்களுக்கு ஆக்க பூர்வமான பதிவுகளை வாசிக்கவும், எழுதவும், சிநேகபூர்வமான தர்க்கங்களை நிகழ்த்தவும், நிறைய வாய்ப்புகளைக் கொடுக்கும்.

    தமிழ் மணத்தின் இந்த நடவடிக்கைக்கு எப்பொழுதுமே என் ஆதரவு உண்டு.

    நண்பன்

    By Blogger நண்பன், At April 14, 2007 11:21 AM  

  • தமிழ்மணத்துக்கு எனது முழு ஆதரவு!

    By Blogger ஜோ/Joe, At April 14, 2007 11:23 AM  

  • 100 % சதவீத மிரட்டல் , நேசகுமாரை வெளியேற்ற நேரம் பார்த்துக்கொண்டிருந்தீர்களோ ?

    அவர் கேட்ட கேள்விகளுக்கு விளக்கமளிக்கலாம் அல்லது அவரிடம் விளக்கம் கேட்கலாம் , அதை விடுத்து தமிழ்சினிமா ஹீரோ போல 24 மணிநேரம் ..... என்ன இது ?

    By Blogger கரு.மூர்த்தி, At April 14, 2007 11:36 AM  

  • தமிழ்மண நிர்வாகிகளுக்கு

    காசி அவர்களுக்கு நேசகுமார் ஏதோ வாக்குக் கொடுத்தது போலவும், அதனி தற்போதைய தமிழ்மண நிர்வாகம் மீறிவிட்டது போலவும் தன்னுடைய ஒரே இயல்பான ஆதாரமின்றி அவதூறுகளை அள்ளி வீசுதல் என்ற செயலை செய்துள்ளார்.

    காசி அவர்கள் வெளிப்படையாக அறிவித்து தானே தமிழ்மண நிர்வாகத்தை டி.எம்.ஐ நிறுவனத்திடம் ஒப்படைத்தார்?

    இன்னும் சொல்லப்போனாம் இந்நபர் தன்னுடைய புதிய வலைப்பதிவை டி.எம்.ஐ நிறுவனம் தமிழ்மண நிர்வாகத்தில் இருக்கும் போது தானே அளித்தார்?

    தங்களின் உறுதியான நடவடிக்கைக்கு நன்றியும் பாராட்டுகளும்.

    By Blogger அட்றா சக்கை, At April 14, 2007 11:37 AM  

  • //எமது குடும்பம், தொழில் சார்ந்த அன்றாட வாழ்க்கை அழுத்தங்களுக்கிடையேயும் பரந்துபட்ட வலைப்பதிவுத்தமிழ்ச் சமூகத்தின் மீதுள்ள அக்கறையை முதன்மைக்குறிக்கோளாகக் கொண்டு அன்றாடம் எம் பொருள், நேரம், ஆற்றலைச் செலவிட்டு, இச்சேவையினை வழங்கி வருகிறோம் என்பதைப் பெரும்பாலான பதிவர்கள் புரிந்திருப்பார்கள் என உளப்பூர்வமாக நம்புகிறோம்//

    இது அனைவரும் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்!

    தமிழ்மணத்திற்கு எனது முழு ஆதரவு உண்டு!

    By Blogger நாமக்கல் சிபி, At April 14, 2007 11:54 AM  

  • நல்ல,தேவையான விளக்கம்,நான் வெளியேறி இருந்தாலும்.

    By Blogger வடுவூர் குமார், At April 14, 2007 12:26 PM  

  • தமிழ்மணத்தின் நடவடிக்கை சரிதான். ஆனால் காலம் தாழ்ந்த நடவடிக்கை. உங்களுக்கு நான் அறிவுரை கூற முடியாது. ஆனால் எனது ஆதங்கத்தைச் சொல்லலாம். எப்போது சக மனிதர்கள் தங்களது பிறப்பு, இனம், மதம், ஜாதி போன்றவை பற்றி மட்டரகமான மொழியில் பேசத் தொடங்கினார்களோ அப்போதே நீங்கள் அவர்களைத் தடை செய்திருக்க வேண்டும்.. இப்படி எழுதினால் நாம் தமிழ்மணத்தில் இருக்க மாட்டோம் என்ற எண்ணம் அவர்களுக்கு வந்திருந்தால் இன்றைக்கு திரு.நேசகுமார் உங்களைக் குற்றம் சாட்டி எழுதும் அளவுக்குக்கூட நிலைமை வந்திருக்காது. இப்போதும் தாமதமில்லை. தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதுபவர்களை இனம் கண்டு எச்சரிக்கை விடுங்கள். திருந்தவில்லை எனில் உடனே தாமதிக்காமல் வெளியேற்றுங்கள்.. வலைத்தளம் ஆரோக்கியம் பெறும்.

    By Blogger உண்மைத்தமிழன், At April 14, 2007 12:27 PM  

  • தமிழ் மணத்தின் இந்த நடவடிக்கைக்கு எப்பொழுதுமே என் ஆதரவு உண்டு.

    By Blogger அழகப்பன், At April 14, 2007 12:50 PM  

  • Why would you want nesakumar to leave thamizmanam ?

    Just because he questions your integrity, you want to get rid of him ?


    Day in and day out separatist sympathizers post anti-hindu, anti-india postings and thamizmanam aggregates those as well. Should we presume that they all have a moral ground to leave the country before they question its integrity ?

    My point here is baseless allegations are kept day in and day out. To threten and remove a person just because he questions you makes no sense at all!

    Your claim and nanban shajahan's seconding your opinion sounds both silly and unwarranted.

    Nanban shajahan has an axe to grind against Nesakumar and other blogger who question his belief system.

    I thought thamizmanam administrators are more mature than this. I am very disappointed with your posting.

    By Blogger வஜ்ரா, At April 14, 2007 12:57 PM  

  • தமிழ்மணம் ஒரு திரட்டி மட்டுமே என்று தெரிந்தும் தமிழ்மணத்தை தேவை இல்லாமல் இதில் இழுத்திருப்பது கண்டிக்க தக்கது.

    By Blogger கோவி.கண்ணன், At April 14, 2007 12:58 PM  

  • தமிழ்மணம் நிர்வாகிகளே,

    http://anjjaappu.blogspot.com/2007/04/blog-post_14.html

    இது போன்ற கீழ்த்தரமான பதிவுகளை நீக்கக்கூடாதா.....என்ன ஒரு வெறி....

    சீனிவாசன்

    By Anonymous Anonymous, At April 14, 2007 1:15 PM  

  • தமிழ்மணம் ஒரு திரட்டி என்ற வகையில் அதன் மீது தொடுக்கப்படுகிற அவதூறுகளை எதிர்கொள்ள எடுக்கிற நடவடிக்கை அவசியமானது. உண்மையை உணரும் அனைவரும் இதை புரிந்துகொள்வார்கள்.

    By Blogger thiru, At April 14, 2007 2:16 PM  

  • //உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்யும் இவர்களை நீக்குவதினால், எந்த பாதகமும் வந்து விடாது தமிழ் மணத்திற்கு.

    மாறாக, பல வலைப்பதிவர்களுக்கு ஆக்க பூர்வமான பதிவுகளை வாசிக்கவும், எழுதவும், சிநேகபூர்வமான தர்க்கங்களை நிகழ்த்தவும், நிறைய வாய்ப்புகளைக் கொடுக்கும். //


    நூற்றுக்கு நூறு சரியான வார்த்தைகள்!

    ஆதாரமின்றி அழுக்குகளையும், அவதூறுகளையும் அள்ளி வீசுவதையும் ஆதாரமோ, விளக்கமோ கேட்கும் பொழுது,

    1. நேரமில்லை
    2. உள்வாங்குகிறேன்
    3. கொலை மிரட்டல்

    போன்ற வெத்துவேட்டுகளை கூறி விஷயத்தை திசை திருப்பி கோமாளித்தனம் காட்டிக் கொண்டிருக்கும் இந்த பதிவரால் தமிழ் சமூகத்திற்கே கேவலம் என்பதை இப்பொழுதாவது அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

    //தமிழ் மணத்தின் இந்த நடவடிக்கைக்கு எப்பொழுதுமே என் ஆதரவு உண்டு.//

    முழுமனதோடு வழிமொழிகின்றேன்.

    கேவல ஜென்மங்களை கேவலப்படுத்தியும், மற்றவர்களையும் அவர்களின் உணர்வுகளையும் மதிக்கத் தெரியாதவர்களை ஒதுக்கியும் தன் வழியில் முன்னேற நினைக்கும் தமிழ்மணத்தின் செயல்பாடுகளை முழுமனதோடு ஆதரிக்கின்றேன்.

    அன்புடன்
    இறை நேசன்

    By Anonymous Anonymous, At April 14, 2007 2:32 PM  

  • //தமிழ்மணத்தின் புதிய நிர்வாகிகள், அவரது ஐபி தகவல்களை வெளியிட்டு அவரை மாட்டிவிட்டுவிட்டார்கள் என்று எனக்கு ஒரு மடலும் வந்தது.//
    இதில் உங்களை அவர் எங்கே குற்றம் சாட்டியிருக்கிறார். தனக்கு ஒரு மெயில் வந்ததை தெரிவித்திருக்கிறார். அவ்வளவுதான். வந்த மெயில் நம்பகமானது என்று அவர் சொல்லியிருந்தாலோ தன்னிடம் அதற்கு ஆதாரம் உண்டு என சொல்லியிருந்தாலோ நீங்கள் அவரை ஆதாரம் கேட்பதில் பொருளுண்டு. ஆனால் அவர் அப்படி சொல்லாத பட்சத்தில் ஆதாரத்தை தா என்றால் என்ன பொருள்? எதற்கான ஆதாரம்? அவருக்கு மெயில் வந்ததற்கான ஆதாரமா? இதென்ன பித்துகுளித்தனம்...ஆனால் இது ஒன்றும் அதிசயமில்லைதான். தமிழ்மணம் அடைந்திருக்கும் தொட்டால் சுருங்கித்தனத்தின் அல்லது தீண்டாமையின் முன்னேற்றம் இது.
    //தமிழ்மணத்தினை, டிஎம்ஐ நிறுவனத்தினை அமைத்து அதன்கீழே தன்னாவர்த்துடன் இலாபநோக்கு எதுவுமின்றி நடந்தும் அங்கத்தவர்களுக்கும் //
    அருமையான வரிகள். ஆனால் தமிழ்மணத்திலிருந்து வெளியாகும் பூங்கா எனும் ஒட்டுண்ணி இதழ் மூலம் ஒரு கருத்தியலை முன்னிறுத்தி (மாற்று கருத்துகளுக்கு இடமளிக்காமல்) பிரச்சாரம் நடத்துவதனை 'இலாப நோக்கு' (not in monetary terms) என்றே கருத வேண்டியுள்ளது. மேலும் இலாபநோக்கு இன்றி என்றால் 'தமிழ்மணத்தில் விளம்பரம் செய்யுங்கள்' என ஏன் ஒரு முத்து ஒளிருகிறது? இன்றைக்கு இலாபம் இல்லாத தமிழ்மணம் இலாப நோக்கே வர்த்தக நோக்கே அற்றது என கூறிட முடியாது. எனவே இத்தகைய தேவையற்ற சுயபிரஸ்தாபங்கள் தேவையற்றவை. //எமது குடும்பம், தொழில் சார்ந்த அன்றாட வாழ்க்கை அழுத்தங்களுக்கிடையேயும் பரந்துபட்ட வலைப்பதிவுத்தமிழ்ச் சமூகத்தின் மீதுள்ள அக்கறையை முதன்மைக்குறிக்கோளாகக் கொண்டு அன்றாடம் எம் பொருள், நேரம், ஆற்றலைச் செலவிட்டு, இச்சேவையினை வழங்கி வருகிறோம் என்பதைப் பெரும்பாலான பதிவர்கள் புரிந்திருப்பார்கள் என உளப்பூர்வமாக நம்புகிறோம்.// ஐயா வலைப்பதிவர்களுக்கும் குடும்பம் தொழில் எல்லாம் இருக்கத்தான் செய்கிறது. அவர்கள் நேரம் செலவிட்டு வலைப்பதிவுகள் நடத்தவில்லை எனில் நீங்களும் இல்லை. இது ஒரு symbiotic உறவு. எனவே மேற்படி 'குடும்பம் தொழில்' செண்டிமெண்டல்-தனங்கள் மறைமுகமாக 'எனவே எனக்கு நன்றியுடன் இருங்கள்' என்கிற பாடல் சிறிது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. ஆனால் தங்கள் கெடு-cum-விளக்கத்தில் கூறியுள்ள ஒரு வரி பிரச்சனையாக உள்ளது. "எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும்." தார்மீகக்காரணம் என தமிழ்மணம் எதைக்குறிப்பிடுகிறது? தார்மீகக்காரணத்துக்காக தமிழ்மண நிர்வாகிகள் விரும்பினால் உங்கள் விதிமுறைக்கொப்ப இணையும் பதிவர்களுக்கு எந்த தகவல்களை தருவீர்கள்? "அவை முறையான விண்ணப்பமூடே சட்டம் கொணரக் கேட்டாலன்றி, எந்நிலையிலுங்கூட, எவருடனும் பகிர்ந்துகொள்ளப்படுவதில்லை" என்கிற வரிக்கும் 'தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்' தகவல்களை அளிப்பேன் என்பதற்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா? இந்த தார்மீகக்காரணங்களுக்காக நீங்களே விரும்பி அளிக்கும் தகவல்களில் ஐ.பி அட்ரஸ் இத்யாதி அடங்குமா? நிற்க நீங்கள் ஐ.பி தகவல்களை கொடுத்திருக்க மாட்டீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் 'தார்மீகக் காரணங்களுக்கும்' 'நாமே விரும்பும்' விரும்பங்களுக்கும் அப்பால் அந்த அளவுக்கான நேர்மை எஞ்சியுள்ளது என்றே நினைக்கிறேன்.

    By Blogger அரவிந்தன் நீலகண்டன், At April 14, 2007 2:38 PM  

  • நேசகுமார் தன் பதிவில் எழுப்பியிருப்பது ஒரு கேள்வி மற்றும் வேண்டுகோள் என்ற அளவில் தான் உள்ளது, அது அவதூறு அல்ல என்று நினைக்கிறேன்.

    "பதிவர்களது அந்தரங்கத்தைப் பாதுகாப்போம் என்று தங்கள் Privacy policy யில் கூறியுள்ளதை மீறூம் வகையில் ஏதாவது நடந்துள்ளதா என்பதையும் அவர்கள் தெளிவு படுத்த வேண்டும்" என்பது தான் அவர் கூறியதன் சாராம்சம்.

    வஜ்ரா கூறியிருப்பது போல, பெரும்பான்மை இந்திய பதிவர்கள், இந்திய வாசகர்களைக் கொண்ட தமிழ்மணம் வலைதிரட்டி இந்திய தேசியம் மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களை சரமாரியாக வெளியிடும் பதிவுகளைத் தங்கு தடையின்றி அனுமதித்து வந்திருக்கிறது.யு.எஸ்.ஏ.வில் சட்ட ரீதியாகப் பதிவு செய்யப் பட்டிருந்தாலும் இந்த விஷயத்தில் தார்மீக ரீதியான நிலைப்பாடு என்ன என்பதையும் தெளிவாக விளக்க வேண்டும்.

    இந்த 24-மணி நேர கெடு போன்ற நடவடிக்கைகள் தமிழ்மணத்தின் மீது பதிவர்கள் வைத்துள்ள மதிப்பை வெகுவாகக் குறைக்கின்றன.

    By Blogger ஜடாயு, At April 14, 2007 2:43 PM  

  • //இந்த 24-மணி நேர கெடு போன்ற நடவடிக்கைகள் தமிழ்மணத்தின் மீது பதிவர்கள் வைத்துள்ள மதிப்பை வெகுவாகக் குறைக்கின்றன.//

    பதிவர்கள் என பொதுவாக இவர் யாரை குறிப்பிடுகிறார்?. இந்த பதிவர்கள் என்ற சொல்லில் "இறை நேசனாகிய" நானும் அடங்குகின்றேன்.

    என்னிடம் கேட்காமலே, என்னிடம் இல்லாத ஒரு கருத்தை என் கருத்து போல் உண்மைக்கு புறம்பாக கூறும் ஜடாயுவை வன்மையாக கண்டிக்கின்றேன்.

    தமிழ் வலையுலகில் சுமூகமான, பரஸ்பரம் மனிதர்களுக்கிடையில் வேற்று விருப்பின்றி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல முறையில் ஒரு கருத்துப்பரிமாற்ற களத்தை அமைக்க முயலும் தமிழ்மணத்தின் செயல்பாடுகள் மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.

    தமிழ்மணத்தின் இந்த செயல்பாடு இதுவரை தமிழ்மணத்தின் மீது தமிழ்பதிவர்களில் ஒருவனாகிய நான் வைத்திருந்த மதிப்பை மேலும் அதிகரிக்க வைக்கின்றது.

    அன்புடன்
    இறை நேசன்.

    By Anonymous Anonymous, At April 14, 2007 3:08 PM  

  • //'எனவே எனக்கு நன்றியுடன் இருங்கள்' என்கிற பாடல் சிறிது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. ஆனால் தங்கள் கெடு-cum-விளக்கத்தில் கூறியுள்ள ஒரு வரி பிரச்சனையாக உள்ளது. "எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும்." தார்மீகக்காரணம் என தமிழ்மணம் எதைக்குறிப்பிடுகிறது? தார்மீகக்காரணத்துக்காக தமிழ்மண நிர்வாகிகள் விரும்பினால் உங்கள் விதிமுறைக்கொப்ப இணையும் பதிவர்களுக்கு எந்த தகவல்களை தருவீர்கள்? "அவை முறையான விண்ணப்பமூடே சட்டம் கொணரக் கேட்டாலன்றி, எந்நிலையிலுங்கூட, எவருடனும் பகிர்ந்துகொள்ளப்படுவதில்லை" என்கிற வரிக்கும் 'தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்' தகவல்களை அளிப்பேன் என்பதற்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா? இந்த தார்மீகக்காரணங்களுக்காக நீங்களே விரும்பி அளிக்கும் தகவல்களில் ஐ.பி அட்ரஸ் இத்யாதி அடங்குமா? நிற்க நீங்கள் ஐ.பி தகவல்களை கொடுத்திருக்க மாட்டீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் 'தார்மீகக் காரணங்களுக்கும்' 'நாமே விரும்பும்' விரும்பங்களுக்கும் அப்பால் அந்த அளவுக்கான நேர்மை எஞ்சியுள்ளது என்றே நினைக்கிறேன்.//

    இதை வழிமொழிகிறேன். தார்மீக காரணங்களுக்கு ஒரு definition தேவை. உங்களது சேவை இலவசமாகவே இருக்கட்டும் ஆனால் எங்களின் private தகவல்கள் உங்களிடம் இருப்பதால் உங்கள் பொறுப்பு என்ன அதை பாதுகாக்க நீங்கள் எடுத்திருக்கும் தற்காப்பு நடவடிக்கைகள் என்ன என்பதை தெளிவு படுத்தவேண்டும்.

    நேசகுமாரை நீக்குவதால் நஷ்டம் உங்களுக்கே தவிர அவருகல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்

    By Blogger கால்கரி சிவா, At April 14, 2007 6:28 PM  

  • //அதனால், தொடர்ந்தும் இத்தகைய தன்மீதான திட்டமிடப்பட்ட ஆதாரமற்ற அவதூறுகளை எக்காரணம் கொண்டும் தமிழ்மணம் அனுமதிக்காது என்பதினை இப்பதிவு மூலம் உறுதிப்படுத்துகின்றோம்.//

    இனிமே எவனாச்சும் எங்களை எதிர்த்து கேள்வி கேட்டா முடிச்சு புடுவோம் என்பதை கொஞ்சம் நாகரீகமாக சொல்லியிருக்கிறீர்களா?

    :-)

    By Blogger Amar, At April 14, 2007 7:40 PM  

  • எனது கருத்து பதிவாக்கியுள்ளேன் - இங்கே

    By Blogger SurveySan, At April 14, 2007 8:54 PM  

  • //நேசகுமாரை நீக்குவதால் நஷ்டம் உங்களுக்கே தவிர அவருகல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்//

    தமிழ்மணம் திரட்டியில் பங்காற்றுபவர்கள் குடும்பத்தில் மட்டுமல்ல, வலைப்பதிவர்களின் வீட்டிலும் இவர் தயவால் தான் உலை கொதிக்கிறது. அதனால் இவரிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்!?

    அவதூறு குற்றசாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் முடிவுக்குட்பட்டது. தமிழ்மணம் எடுக்கும் முடிவுக்கு என் ஆதரவு எப்போதும் உண்டு.

    anbudan,
    abumuhai

    By Blogger அபூ முஹை, At April 15, 2007 12:27 AM  

  • //தமிழ்மணத்துக்கு எனது முழு ஆதரவு!

    ஜோ//

    அதே.
    இன்னும் கூட கட்டுப்பாடுகளைக் கூட்டுவது நலமே. தரம் தாழ்ந்த பதிவுகள் இன்னும் நிறையவே உள்ளன. காது கூச வைக்கும் அப்பதிவுகளின் சேவை தேவையா? அவைகளுக்கு இங்கு இடம் தேவையா?

    By Blogger தருமி, At April 15, 2007 1:18 AM  

  • நேசகுமாரை நீக்குவது சரியான முடிவு, இது வரை தமிழ் மணத்தில் பின்னூட்டம் மட்டுமே எழுதியிருந்தாலும் என் கருத்தையும் பதிவு செய்ய ஆசைப்படுகிறேன், அவதூறு பரப்புவது அவருக்கு ஒன்றும் புதிதல்ல -ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில் மனுசனையே கடிச்ச கதையா தமிழ்மணத்தின் பேரிலே அவதூறா? - அவரின் பதில் பதிவையும் (வழக்கம் போல் நீண்ட - ஒரு மன்னாங்கட்டி விஷயமும் இருக்காது என்பது வேறு விஷயம்)படித்தேன், இப்படிப்பட்டவரின் எ௯ழுத்து தமிழ்மணத்திற்கு தேவையில்லை, சாராயத்தை தெளித்தௌ அப்படி ஒன்றும் கோலம் போட வேண்டிய அவசியம் தமிழ்மணத்திற்கு இல்லை - சிகப்பு எழுத்தின் நிறம் (நேசக்குமாரின் எழுத்தை போலவே) கண்ணை உறுத்துகிறது, மாற்ற இயலுமா? - நாகூர் இஸ்மாயில்

    By Blogger nagoreismail, At April 15, 2007 4:02 AM  

  • சமூகத்தைச் சீரழிக்கும் இதுபோன்ற விஷச்செடிகளைக் கறுவறுக்க தமிழ்மணம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை முழு மனதாக வரவேற்கப்பட வேண்டிய ஒன்று!

    துவேஷத்தை உடல் முழுவதும் பூசி வேஷம் கட்டி வலம் வந்து கொண்டிருக்கும் இது போன்ற மனநோயாளிகளை சமூகத்தில் இருந்து அனைவரும் பிரித்து வைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை சரியான நேரத்தில் உணர்த்தியுள்ளீர்கள்.

    இவரின் செயலைப் பரிந்துரைத்து இவரின் "சகாக்கள்" இங்கே அடிக்கும் ஜல்லி சத்தம் ஏனோ கொஞ்சமும் பொருந்தாமல் போனது அவர்களின் துரதிருஷ்டமே!

    By Blogger அபூ ஸாலிஹா, At April 15, 2007 4:16 AM  

  • //காசி அவர்களுக்கு நேசகுமார் ஏதோ வாக்குக் கொடுத்தது போலவும், அதனி தற்போதைய தமிழ்மண நிர்வாகம் மீறிவிட்டது போலவும் தன்னுடைய ஒரே இயல்பான ஆதாரமின்றி அவதூறுகளை அள்ளி வீசுதல் என்ற செயலை செய்துள்ளார்.//

    ஆதாரமற்ற விஷயங்களை தனக்கு ஏற்றாற்போல் திரித்து அவதூறுகளை அள்ளி வீசுவது நேசகுமார் வாடிக்கையாக செய்து வருவதுதான். தமிழ்மணம் நிர்வாகத்தின் நடவடிக்கை மிகவும் நியாயமானது. இதற்கு எனது முழு ஆதரவும் உண்டு.

    By Blogger இப்னு பஷீர், At April 15, 2007 4:33 AM  

  • தமிழ்மணம் Tor சேவை பெறும் பதிவர்களை தன்னில் இணைத்துக்கொள்வதில்லையாமே, கேள்விப்பட்டேன். உண்மையா எனில் அது ஏன்? பதிவர்களின் ஐபி அந்த அளவு தமிழ்மணத்துக்கு அவசியப்படுகிறதா? இது குறித்து தமிழ்மணம் ஒரு விளக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கலாமா அல்லது ஆட்டோ வில் அடியாள் கும்பலை அனுப்பி வீட்டை காலிபண்ண மிரட்டுவதை பாலிஷாக செய்து 24 மணிநேர பத்வா போட்டு பதிலளிக்குமா தமிழ்மண நிர்வாகிகளின் தார்மீக உச்ச வரம்பு?

    By Blogger அரவிந்தன் நீலகண்டன், At April 15, 2007 10:29 AM  

  • TOR is an add on to the firefox browser. By enabling TOR, you can hide your IP address. The IP packets will travel through different computers around the world and will reveal someone else's IP.

    Thamizmanam has barred those using this service from utilising its services(for example adding a blog to thamizmanam). This has been done with a view to trace the actual IPs of thamizmanam users.

    By Blogger அரவிந்தன் நீலகண்டன், At April 15, 2007 10:45 AM  

  • நேசகுமார் தமிழ்மணத்தைத் தொடர்புபடுத்தி எழுதியது இதுதான்: "தமிழ்மணத்தின் புதிய நிர்வாகிகள், அவரது ஐபி தகவல்களை வெளியிட்டு அவரை மாட்டிவிட்டுவிட்டார்கள் என்று எனக்கு ஒரு மடலும் வந்தது.இந்த விஷயத்தில் இன்னும் முழுமையாக என்ன நடந்தது, நடக்கிறது என்று புரியவில்லை...தமிழ்மணத்தை நிர்வகிப்பவர்கள் தயவுசெய்து இந்தப் பிரச்சினையில் அவர்களின் பங்கு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்".

    இதில் நேசகுமார் தமிழ்மணத்தை எங்கே அவதூறாக எழுதினார் என்று உண்மையிலேயே எனக்குப் புரியவில்லை. அல்லது, இவ்வாறு கேள்வி கேட்டாலே அதனை பதிவரை எதிர்த்து நடவடிக்கை எடுக்கப்போதுமானதாக கருதுகிறதா தமிழ்மண நிர்வாகம்?

    "Specific information such as name, IP address, email address, or other contact information will never be shared with anyone unless ordered by a court of law"- இது TERMS AND CONDITIONS-இல் உள்ளது. ஆனால், "தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும்" என்றும் எழுதியிருக்கிறீர்கள். இது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. உங்கள் விருப்பப்படி நீங்கள் சில பதிவர்களுக்கு Specific information தருகிறீர்கள் (லீக் செய்கிறீர்கள்) என்ற குற்றச்சாட்டுக்கு இது மிகத்தெளிவாக வலு சேர்க்கிறது.

    நேசகுமார் எழுப்பியுள்ளது ஒரு கேள்வி, ஓர் ஐயம். அந்த ஐயம் அடிப்படையற்றது என்றால், அதனைத் தெளிவுபடுத்தவேண்டியது தமிழ்மணத்தின் கடமை. கேள்வி எழுப்பியதாலேயே தண்டனை தருவோம் என்பது ஆங்கிலக் காலனியாளர்களும் ஸ்டாலினும் ஹிட்லரும் கைக்கொண்ட அடக்குமுறை அணுகுமுறையே தவிர வேறில்லை.

    ஜெனரல் டயர் இப்படித்தான் ஒருநாள் முன்பாக தடையுத்தரவு போட்டு அடுத்த நாள் "சட்ட பூர்வமாக" ஒரு படுகொலையை நிகழ்த்தினான். ஏப்ரல் 13 ஜாலியன் வாலாபாக் நினைவுதினம். நீங்களோ அப்பட்டமான இந்த ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்த ஏப்ரல் 15-ஐத்தெரிவு செய்திருக்கிறாற்போல் தெரிகிறது. இதற்கு என் கடுமையான கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

    நேசகுமாருக்கு விளக்கம் அளித்து விட்டு, தமிழ்மண நிர்வாகிகள் குறித்து உள்ள அப்பதிவில் உள்ள பின்னூட்டங்களை நீக்குவதற்கு (பதிவையே நீக்குவதற்கு அல்ல) காலக்கெடு விதித்தால், அதில் குறைந்த பட்ச நேர்மையாவது இருக்கும். அப்படிச்செய்யாமல் அவரது பதிவுகளையே தமிழ்மணத்திலிருந்து தடை செய்வோம் என மிரட்டுவதும், அவ்வாறு தடை செய்வதும் தமிழ்மண நிர்வாகிகள் மேல் உள்ள கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் மேலும் உறுதி செய்வது போலத்தான் இருக்கும்.

    நேசகுமாரைத் தடை செய்வதால் மட்டும், எழுந்த கேள்விகள் மறைந்து விடாது. கீழ்க்கண்ட கேள்விகளுக்கு தெளிவான பதிலைத் தமிழ்மணம் தர முடியுமா?:

    - சம்பந்தப்பட்டவரது குறிப்பிட்ட லாக்-இன் விவரங்களையோ ஐபி அட்ரஸ்களையோ, வேறு தொடர்பு விஷயங்களையோ தமிழ்மணம் யாருக்காவது இவ்விஷயத்தில் வழங்கியதா?

    - தமிழ்மணம் நெருப்புச்சுவற்றுக்குப் பின் Ping (அல்லது வேறு வகையில் தகவல் சேகரிப்பு)) செய்வதுண்டா?

    By Blogger arunagiri, At April 15, 2007 11:52 AM  

  • தமிழ் மணத்தின் எந்த நடவடிக்கைக்கும் எப்பொழுதும் என் ஆதரவு உண்டு.


    சென்ஷி

    By Blogger சென்ஷி, At April 16, 2007 1:23 AM  

  • 24 மணி நேரக் கெடு என்றதும் நான் கூடத் தமிழ்மணம் வழக்கு தொடுக்கப் போகிறதோ என்று நினைத்தேன். பதிவை விளக்கத் தான் இந்த விளக்கம் என்றதும் சப்பெனப் போய் விட்டது. தயவுசெய்து விலக்கப்படும் ஒவ்வொரு பதிவருக்கும் இப்படி பெரிய விளக்கம் அளித்து உங்கள் நேரத்தமை வீணாக்கிக் கொள்ளாதீர்கள். இது போன்ற பதிவுகளை spam/junk என்று வடிகட்ட உங்களுக்கு சுதந்திரம் உண்டு. spam filterல் வடிகட்டும் ஒவ்வொரு தளத்துக்கும் கூகுள் கடிதம் எழுதினால் விடிந்த மாதிரி தான். நீங்கள் ஒவ்வொரு தனிப்பட்ட பதிவருக்கும் பதிவு எழுதுவதால் தான், பதிவர்களும் உங்களை நுட்ப வகையில் பார்க்காமல் தனிப்பட்ட முறையில் பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

    இது என் தாழ்மையான கருத்து !

    By Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar, At April 16, 2007 3:29 AM  

  • //நேசகுமாரை நீக்குவதால் நஷ்டம் உங்களுக்கே தவிர அவருகல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்//

    செம காமெடி :-)))))))))))))

    By Blogger லக்கிலுக், At April 20, 2007 12:59 AM  

  • தமிழ்மணம் சட்டதிட்டங்களுக்குட்பட்டு அதனோடு இணைத்துக் கொண்ட வலைப்பதிவன் என்ற வகையில் இந்த நடவடிக்கையை என்னால் சரியானபடி புரிந்துகொள்ள முடிகிறது.

    இவ்விசயத்தில் ரவிசங்கர் கருத்தோடும் முழுமையாய் உடன்படுகிறேன். அந்த வகையில் தமிழ்மணம் இன்னும் நிறைய தூரம் சேல்ல வேண்டியுள்ளது. செல்லும் என்றே நம்புகிறேன்.

    நன்றி

    By Blogger தகடூர் கோபி(Gopi), At April 20, 2007 1:40 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home